அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளி*
மதுரை ஏப்ரல் – 21
சேலம்: அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாநகரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாநில காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகரில் கடந்த சில நாள்களாக கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அதன்படி சேலம் அம்மாபேட்டை நாம மலை பகுதியை சேர்ந்த ரெளவுடியான அருண்(30) என்பவரை கஞ்சா விற்பது தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அருணை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, கஞ்சா குற்றவாளி கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கழிவறையில் இருந்த டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்டு, கையில் குத்திக் காயம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அருணை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கைதி காவல்நிலையத்தில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.