ஆன்மீகஜெயம் இன்று சஷ்டி சிறுவா புரி முருகன் ஸ்பெஷல்
சிறுவாபுரி முருகனை நினைத்தாலே வேண்டியது கிடைக்கும்.
சென்னைக்கு வடமேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் மேற்கே பிரியும் 33வது கிலோ மீட்டரில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தோரண வாயில் அமைந்துள்ளது.
இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் சின்னம்பேடு என்று தற்போது அழைக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
செங்குன்றத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தச்சூர் கூட்டு சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ தொலைவு சென்றால் ஆலயத்திற் குச் செல்லும் வழியை அடையலாம்.
செங்குன்றத்திலிருந்து செல்ல வாகன வசதிகள் உண்டு. நுழைவு வாயிலைக் கடந்து ஆலயத்தை நோக்கிச் செல்லும்போது இரண்டு பக்கமும் பசுமையான நிலங்களும் வாழைத் தோப்புகளும் காணும்போது கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
செல்லும் வழியில் சப்தமாதா ஆலயம், அகத்தீஸ்வரர் ஆலயம், பெருமாள் ஆலயம், விஷ்ணு துர்க்கை ஆலயம் என எண்ணற்ற ஆலயங்கள் இருக்கும் இடத்தில் வடக்குவாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.
சிறுவாபுரி முருகன் அபிஷேகத்தின் போது பார்க்க, அவர் மாமன் பெருமாளைப் போல இருக்கிறார்.
ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி எதிரே சிறுவாபுரி முருகனை காண்பித்தால் ஏதோ பெருமாள் கோவிலின் கருவறைக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றே தோன்றும்.
திருமலையில் ஸ்ரீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதே போல இவரும் நிற்கிறார்.
முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டுச் சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் மற்ற தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.